India

”இந்தியாவிற்கே வழிகாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : டெல்லியில் CPI பொதுச் செயலாளர் டி.ராஜா பேட்டி!

தமிழ்நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய பா.ஜ.க அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்கான 7 ஆயிரத்து 425 கோடி ரூபாயில் ஒரு ரூபாய் கூட இன்னும் விடுவிக்கப்படவில்லை.

இதேபோல் 2023-ம் ஆண்டு அடுத்தடுத்து 2 இயற்கை பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்த நிலையில், பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரத்து 986 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால் 276 கோடி ரூபாயை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கியது. இதேபோல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியையும் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை டெல்லி சென்றார். அப்போது விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜா,”அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்தை காப்பதில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் சமூக நீதி, மாநில உரிமைகளுக்காக போராடி வருகிறார். இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் தனது அரசை சிறப்பாக நடத்தி செல்கிறார்.

ஒன்றிய அரசு மக்கள் விரோத கொள்கைகளை பின்பற்றி வருகிறது. மதநல்லிணக்கம், அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம் இவற்றை சிதைத்து வருகிறது. இந்த உரிமைகளை எல்லாம் காப்பாற்ற நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. இந்தியா கூட்டணி தலைவர்கள் மேலும் ஒற்றுமையுடன் போராட வேண்டும். இப்போராட்டத்தில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முக்கிய பங்காற்றி வருகிறார்" என தெரிவித்துள்ளார்.

Also Read: பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாட்டிற்கான நிதியை உடனே வழங்க வலியுறுத்தல்!