India

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கொடூரர்... 6 வயது சிறுமியை காப்பாற்றிய குரங்கு கூட்டம் !

நாடு முழுவதும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் இது போன்ற சம்பவம் அதிகரித்தே காணப்படுகிறது. சிறுமிகள் மீதான வன்கொடுமை தாக்குதலை தடுக்க ஒன்றிய அரசு பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த சூழலில் சிறுமி ஒருவரை, மிரட்டி வன்கொடுமை செய்ய முயன்ற நபரை குரங்கு கூட்டம் தாக்கி விரட்டியடித்துள்ள நிகழ்வு பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தர பிரதேசத்தின் பாக்பத் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் யாருமில்லை என்பதை உணர்ந்து சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்ற அந்த நபர், சிறுமியின் தந்தையை கொலை செய்துவிடுவதாக மிரட்டி, சிறுமியை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு அங்கு குரங்குக் கூட்டம் கூடியுள்ளது. பின்னர் அந்த நபரை அந்த குரங்குகள் ஒன்றாக சேர்ந்து தாக்கி விரட்டியடித்துள்ளது.

இதனிடையே சிறுமியை காணவில்லை என்று அதன் பெற்றோர் தேடி வந்த நிலையில், சிறுமியும் அந்த பகுதியை நோக்கி அழுதுகொண்டே சென்றபோது பெற்றோர் அவரை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து அவரிடம் நடந்தவற்றை கேட்டபோது, இதுகுறித்து சிறுமி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே இந்த சம்பவம் குறித்து போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரிக்கையில், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். தற்போது அந்த நபர் குறித்த எந்த விவரமும் தெரியவரவில்லை. எனினும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை தெரிவிக்கையில், “எனது 6 வயது மகளுடன் ஒரு குறுகிய பாதையில் நபர் ஒருவர் நடந்து செல்வது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் அந்த நபர் யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. குரங்குகள் மட்டும் சரியான நேரத்தில் வராமல் இருந்திருந்தால், இப்போது எனது மகள் இறந்து போயிருப்பார்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அவதூறு... பிரபல இயக்குநர் மோகன் ஜீ சென்னையில் கைது செய்த திருச்சி போலீஸ் - காரணம் என்ன ?