India

ஒன்றிய அரசின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்! : உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர் தாமதம்!

ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியது முதல், வரி விதிப்பிலும், நில சுரண்டல்களிலும் காணப்படுகிற வேகம், அரசுப் பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதில் காணப்படுவதில்லை.

அதனடிப்படையில், ஒன்றிய ஆட்சிப் பணி, கல்வி மற்றும் இதர துறைகளில் வெற்றிடங்கள் இருந்து வருகின்றன. இதனால், வேலைவாய்ப்பு தருகிற எண்ணம், பா.ஜ.க.விற்கு இல்லை என்ற குற்றச்சாட்டும் அரசியல் வல்லுநர்களாலும், எதிர்க்கட்சியினராலும் முன்னிறுத்தப்படுகின்றன.

இந்நிலையில், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இக்குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து தொடரப்பட்ட வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம் சில கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து சில நியமனங்கள் விரைவு படுத்தப்பட்டன. ஆனாலும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் உள்பட பல கொலிஜியம் பரிந்துரைகள் தற்போதும் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் நாளை வழக்கு மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதனிடைய இன்று தலைமை நீதிபதி அமர்வில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, நாளை பட்டியலிடப்பட்டுள்ள வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது தலைமை நீதிபதி சந்திரச்சூடு, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் தாமதமாவதற்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில அரசு ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

பின்னர், வழக்கு நாளை விசாரணைக்கு வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி வழக்கை ஒத்தி வைக்க மறுப்பு தெரிவித்தார். ஜார்கண்ட் மாநிலம் உள்பட 7 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதியை நியமிக்க கடந்த ஜூலை பதினோராம் தேதி உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை வழங்கியிருந்தது.

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியை நியமனம் செய்யாமல் தாமதம் செய்வதை தொடர்ந்து ஜார்கண்ட் மாநில அரசு ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் வழங்கிய சில குறிப்புகளின் அடிப்படையில் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மூன்று நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனத்தை மாற்றி கொலிஜியம் புதிய பரிந்துரையை நேற்று முன்தினம் வழங்கி உள்ளது. இந்த நிலையில் வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

Also Read: 100க்கும் மேற்பட்ட தலித் வீடுகள் தீ வைத்து எரிப்பு : பா.ஜ.க கூட்டணி அரசின் காட்டு தர்பார்!