India

நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் பாஜகவின் நூதன மோசடி.. கொந்தளிக்கும் புதுச்சேரி மக்கள்.. நடந்தது என்ன?

நாடு முழுவதும் பாஜக பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இதில் உறுப்பினர் சேர்க்கையும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சில நேரங்களில் மக்கள் தங்களுக்கே தெரியாமல், பாஜகவில் இணைந்துவிட்டதாக குறுஞ்செய்தி வருவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை ஏமாற்றி பாஜகவில் இணைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை என்ற பகுதியில் உள்ள அகத்தியர் வீதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நலத்திட உதவிகள் வழங்குவதாகவும், தீபாவளி பரிசு வழங்குவதாகவும் மர்ம நபர்கள் சென்றுள்ளனர். இதையடுத்து அந்த பகுதி மக்களை ஒரே இடத்திற்கு அழைக்காமல், அவரவர் வீடுகளுக்கு சென்று, தாங்கள் ஒரு அறக்கட்டளையில் இருந்து வருவதாகவும் நலத்திட்ட உதவிகள் செய்வதாகவும் கூறி அவர்களது தொலைபேசி மற்றும் ஆதார் எண்களை கேட்டுள்ளனர்.

இதனை நம்பிய மக்களும் உடனே தங்கள் எண்ணையும், தங்கள் குடும்பத்தினர் எண்களையும் அந்த மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த எண்களுக்கு சில மணி நேரங்களில் “பாஜக உறுப்பினராக சேர்ந்ததற்கு வாழ்த்துகள்” என ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

பாஜகவில் இணைந்ததாக வந்த மெசேஜை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் தங்களுக்கு வந்த குறுஞ்செய்தியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கொந்தளித்து வருகின்றனர்.

பாஜகவின் நூதன மோசடிக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி பெண்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும், இவ்வாறு செய்தது மிகவும் தவறு என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: Instagram-ல் ஆபாசமாக பாடல் பாடி வீடியோ வெளியிட்ட கானா கௌதம்... தட்டி தூக்கிய திருச்சி போலீஸ் !