India

நீட் தேர்வில் புதிய மோசடி அம்பலம் : ஒருவர் கைது - தொடரும் மோசடிகள்!

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற இளங்கலை நீட் தேர்வில், தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்து சர்ச்சைய ஏற்படுத்தியது.

மேலும் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. முதல் முதலில் நீட் தேர்வு அறிமுகம் படுத்தியபோதே தமிழ்நாடுதான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது. ஆனால் இப்போது இந்தியாவே தமிழ்நாட்டின் குரலை பிரதிபலிக்கிறது.

தற்போது ட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை குறி வைத்து மோசடி நடப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. நீட் தேர்வு எழுதிய டெல்லியைச் சேர்ந்த மாணவனை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் ரூ.35 லட்சம் கொடுத்தால் உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஏதேனும் ஒரு மருத்துவ கல்லூரியில் மருத்துவ சேர்க்கைக்கான இடம் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.

இதில் ஏதோ மோசடி இருப்பதை உணர்ந்த அந்த மாணவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து டெல்லியில் குமார் கௌரவ் என்கிற பொறியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். வரது மனைவி பல் மருத்துவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் டெல்லி, நொய்டா, லக்னோ போன்ற இடங்களில் அலுவலகம் அமைத்து இவர்கள் மாணவர்களை ஏமாற்றி வருவது தெரியவந்துள்ளது.

ரூ.30 முதல் ரூ.40 லட்சம் வரை வழங்கினால் மருத்துவ இடம் பெற்று தருவதாக கூறி பலரிடம் வசூல் நடத்தியுள்ளனர். இதுவரை 12க்கு மேற்பட்ட மாணவர்களிடம் பணம் பெற்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடியில் தற்போது மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Also Read: Telegram-ல் கசிந்த முதுகலை நீட் வினாத்தாள் : மீண்டும் சர்ச்சையில் நீட் தேர்வு!