India

செபி தலைவர் மீது Hindenburg மீண்டும் குற்றச்சாட்டு!: பதில் அளிக்காமல் அலட்சியமாக இருக்கிறாரா மாதவி புச்?

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் (Hindenburg), இந்தியாவின் பெரும் முதலாளியான அதானி மீது பல மோசடி குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறது.

அதற்கான சான்றுகளையும், பொது வெளியில் வெளியிட்டு வருகிறது. எனினும், அதற்கு பெருமளவில் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பா.ஜ.க அரசு, அதானி மோசடிகளை விசாரிக்கும் உரிமையை இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI) வழங்கியது.

இந்நிலையில், SEBI-ன் தலைவரும், அதானி மோசடியில் பங்கு கொண்டவர் தான் என்ற மற்றொரு குற்றச்சாட்டை அண்மையில் வெளியிட்டது ஹிண்டர்பர்க் நிறுவனம். ஆனால், அதற்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு செவி சாய்க்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, தற்போது SEBI தலைவர் மாதவி புச் மீது மேலும் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது ஹிண்டன்பர்க் நிறுவனம். அது குறித்து ஹிண்டர்பர்க் வெளியிட்ட பதிவில்,

“செபி தலைவர் மாதவி புச் 99% பங்குகள் கொண்ட தனியார் ஆலோசனை நிறுவனம், பல நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றுள்ளது.

செபி கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களிடம் இருந்தும், செபி தலைவரின் தனியார் ஆலோசனை நிறுவனம் நிதி பெற்றுள்ளது.

மகேந்திரா & மகேந்திரா, ICICI நிறுவனங்களிடம் இருந்தும், மாதவி புச் நிறுவனத்திற்கு நிதி அனுப்பப்பட்டுள்ளது.

மாதவி புச்-க்கு எதிராக பல மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தும், அதற்கு அவர் பதல் அளிக்காமல் அமைதி காத்து வருகிறார்” என தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, SEBI தலைவர் மீதும், அதற்கு பின்னணியில் இருக்கிற அதானி மற்றும் ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

Also Read: பாரதியாரின் நினைவு நாள் : ‘மகாகவி’ நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை!