India

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து பந்த்! : தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி அறிவிப்பு!

என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி செய்யும் புதுச்சேரியில் கடந்த மாதம் வீட்டு உபயோகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி அறிக்கை வெளியிட்டது புதுச்சேரி அரசு.

இந்த அறிவிப்பு வெளியானதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் தலைமைச் செயலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மின் கட்டண உயர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவகத்தில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க.வின் மூத்த தலைவருமான இரா. சிவா, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா. சிவா, “புதுச்சேரியில் உயர்த்தபட்ட மின் கட்டணம் திரும்பபெறாத நிலையில் பொதுமக்கள் மிகுந்த அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் மின் கட்டண உயர்வை திரும்ப பெறாமல் மானியம் வழங்குவதாக கூறி மக்களை ஏமாற்றும் புதுச்சேரி அரசைக் கண்டித்து வரும் 18ம் நாள் மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தை இந்தியா கூட்டணி சார்பில் நடத்த உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: ஒரு மாதம் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலத்தில் அதிர்ச்சி!