India

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய் : இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு அறிகுறி - ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்!

அண்மைக்காலமாக திடீரென்று சில நோய்கள் தொற்றி உலக நாடுகளையே அதிர வைக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவான கொரோனா தொற்று நோயானது உலகத்தையே புரட்டி போட்டது. தொடர்ந்து உலக மக்கள் இந்த நோயால் கடும் அவதிக்குள்ளானது மட்டுமின்றி, லட்சக்கணக்கான உயிர் பலியும் வாங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து என நோய்கள் உருவாகி வரும் நிலையில், தற்போது குரங்கம்மை தொற்று மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து குரங்கம்மை நோய் உலக அளவில் பரவத்தொடங்கியுள்ளது. நாடுகள், பிரதேசங்கள் என 100-க்கும் மேற்பட்ட பகுதிகளில் குரங்கம்மை தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த நோய் தொற்று பரவாமல் இருக்க வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருகை தரும் பயணிகளிடம் விமான நிலையங்களிலேயே குரங்கம்மை பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

இந்த சூழலில் தற்போது ஒருவருக்கு குரங்கம்மை நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. குரங்கம்மை தொற்று நோய் இருக்கும் நாட்டில் இருந்து இளைஞர் ஒருவர் இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் அவருக்கு சோதனை நடத்தியதில் குரங்கம்மையின் அறிகுறி இருந்துள்ளது. இது இந்தியாவின் முதல் அறிகுறி நபர். இதையடுத்து தற்போது அந்த இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அவரது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, அவரது உடல்நிலை நிலையாக இருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் இந்த தொற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

=> குரங்கம்மைத் தொற்று எப்படி பரவுகிறது? யார் யாருக்கு பரவுகிறது? எப்படி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்? என்னென்ன சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்த தமிழ்நாடு சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் :

* குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் 21 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, குடல் வலி ஏற்பட்டால் 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

* பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்கு சென்று சோதனை செய்து சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு உடையை அணிந்து பணியாற்றவும் உத்தரவு

* இந்த நோய் வைரஸ் தொற்று என்பதால் வைரஸ் தொற்று சிகிச்சையை இந்த நோய்க்கு தொடங்கவும் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

* மேலும், இத்தகைய அறிகுறி உடன் வரக்கூடியவர்களை தனியார் மருத்துவமனைகளிலும் கண்காணித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read: விநாயகர் சதுர்த்தி : சிலையின் கையில் இருந்த பெரிய லட்டுவை திருடிய மர்ம நபர்... சிசிடிவி காட்சி வைரல் !