India

தொடரும் ரயில்வே போலீஸாரின் அட்டூழியங்கள்.. தலித் பாட்டி & பேரனை மீது கொடூர தாக்குதல் - பதைபதைக்கும் CCTV!

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் கட்னி பகுதியில் இரயில்வே நிலைய போலீசார், திருட்டு வழக்கில் தலித் சமூகத்தை சேர்ந்த மூதாட்டியையும் அவரது 15 வயது பேரனையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். சம்பவத்தன்று தீப்ராஜ் (15 வயது) சிறுவன் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கே வந்த சில போலீசார், அவரது தந்தை குறித்து விசாரித்துள்ளனர்.

சிறுவன் தனக்கு தெரியாது என்று கூறவும், அவரை அடித்து, அவரது தந்தை ஒரு திருடர் என்று கூறி மீண்டும் அவரை கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அங்கிருந்த சிறுவனின் பாட்டி குசும் வன்ஷ்கர் (55 வயது) கேட்டபோது, போலீசார் அவரையும் தாக்கியுள்ளனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் தங்களுடன் அழைத்து சென்று, தனி அறையில் வைத்து தாக்கியுள்ளனர்.

முதலில் பெண் போலீஸ் ஒருவர் தனது கையில் இருந்த கம்பை கொண்டு அந்த மூதாட்டியை அடித்துள்ளார். பின்னர் அவரை கீழே தள்ளி, பெல்ட்டால் தாக்கி தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக நடந்துகொண்டுள்ளார். தொடர்ந்து வெளியில் இருந்து வந்த மற்ற போலீஸ் கும்பல் சிறுவனை பெல்ட், கம்பு உள்ளிட்டவைகளால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்த கோர சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், இது கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் நடந்த சம்பவம் என்றும், பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை பெரிய திருடர் என்றும் இரயில்வே போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். எனினும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் பூதகரமாகியுள்ள நிலையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிய பாஜக அரசுக்கும், மாநில பாஜக அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி கண்டனம் குவிந்து வருகிறது.

பீகாரில் இளைஞரை போலீசார் கடுமையாக தாக்கியதில், அவரது குடல் வெளியே வந்த சம்பவம்

முன்னதாக கடந்த ஜூலை மாதம், பாஜக கூட்டணி ஆளும் பீகாரில் தனது உறவினரை இரயில் ஏற்றி விட வந்த இளைஞரை போலீசார் கடுமையாக தாக்கியதில், அவரது வயிறு கிழிந்து குடல் வெளியே வந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Also Read: 40730 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : 2997 கடைகளுக்கு சீல் வைத்த காவல்துறை!