India

வங்கதேச விவகாரம் : அப்பாவி இஸ்லாமியர்களை தாக்கும் இந்துத்துவ கும்பல்... உ.பி-யில் அரங்கேறும் அராஜகம் !

வங்கதேசத்தில் தற்போது ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, இராணுவத்தின் ஆதரவுடன் எதிர்க்கட்சியான தேசியவாத கட்சி ஆட்சியமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கே தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கிருக்கும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பல்வேறு போலி செய்திகள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரிபப்ளிக் டி.வி. இதுபோன்ற செய்தியை வெளியிட்டதால், வங்கதேச தேசிய இந்து மகாஜோத் அது மகாஜோத் அமைப்பின் பொதுச் செயலாளர் கோபிந்த பிரமானிக் இந்துக்கள் தாக்கப்படவில்லை என்றும், மாறாக அவர்களும், கோயில்களும் பாதுகாக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்தார். எனினும் தொடர்ந்து பாஜகவினரும், இந்துத்துவ கும்பலும் இதுபோன்ற போலி செய்தியை பரப்பி, மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது.

இந்த சூழலில் வங்க தேச விவகாரத்தின் இந்த போலி செய்தியின் எதிரொலியாக இந்தியாவில் இஸ்லாமியர்களை தாக்கி இந்துத்துவ கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் இந்திய முஸ்லீம் குடிசைவாசிகளை இந்துத்துவ கும்பல் கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்து ரக்ஷா தளத்தைச் சேர்ந்த பிங்கி சௌத்ரி மற்றும் அவரது கூட்டாளிகள், அங்கு வசிப்பவர்களின் பெயர்களை கேட்டு, அது இஸ்லாமிய பெயராக இருக்கும்பட்சத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, குடிசைகளை சேதப்படுத்தி, வெளியேறு 'பங்களாதேஷி' (வங்க தேச காரரே) என்று கூச்சலிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிங்கி சௌத்ரி டெல்லியில் இருக்கும் வங்கதேசத்தினரை தாக்கிய தமது கூட்டாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று போலீசாருக்கு வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு இந்தியாவில் இருக்கும் எந்த வங்கதேசியரையும் விடமாட்டேன் என்றும், 24 மணி நேரத்திற்குள் அவர்கள் யாரையும் நான் விடமாட்டேன் என்றும், அவர்கள் தங்கியிருக்கும் அனைத்து இடங்களும் எனக்குத் தெரியும்" என்றும் மிரட்டியுள்ளார்.

இந்து ரக்ஷா தளத்தைச் சேர்ந்த பிங்கி சௌத்ரி மற்றும் அவரது கூட்டாளிகள் அப்பாவி இஸ்லாமிய மக்களை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்கள் குவிந்து வருகிறது. பிங்கி சௌத்ரி தாக்குதல் நடத்திய இடத்தில் எந்த ஒரு வங்க தேசத்தினரும் இல்லை என்று போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்துள்ளனர். எனினும் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்த தாக்குதலில் கடுமையான காயம் ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read: "அரசியலுக்கு அப்பாற்பட்டு பேரிடர் நிதியை ஒன்றிய அரசு பகிர்ந்து அளிக்க வேண்டும்" - சசி தரூர் MP கோரிக்கை !