India

5000 வழக்குகளில் 40க்கு மட்டுமே தண்டனை! : அமலாக்கத் துறையை கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம்!

எதிர்க்கட்சியினரை கண்டால் வழக்குப்பதிவு செய்வது, ஆதாரம் இல்லாத நிலையிலும் கைது செய்வது என ஒன்றிய பா.ஜ.க.வின் ஆட்சி காலத்தில் அமலாக்கத்துறைக்கு எழுகின்ற எதிர்ப்புகள் ஏராளம்.

அவ்வெதிர்ப்புகளுக்கு, எடுத்துக்காட்டுகளாக ஆதாரமற்று கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் வழக்குகளும் அடக்கம்.

இதனால், அமலாக்கத்துறை மீது இருக்கிற நம்பகத்தன்மையும் நாளுக்கு, நாள் கணிசமாக குறையத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில அமலாக்கத்துறை பிணை வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், நிதிபதிகள் சூரியகாந்த், திபாங்கர் தத்தா, உஜ்ஜால் பூயான் ஆகியோர் அமர்வில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது நீதிபதிகள், “கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை 5000 வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஆனால், அதில் 40 வழக்குகள் மட்டுமே விசாரித்து முடித்து தண்டனை பெறப்பட்டுள்ளது” என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்திருந்த பதிலை குறிப்பிட்டு இந்த விமர்சனத்தை முன் வைத்தனர்.

மேலும், “வழக்கு மற்றும் ஆதாரங்களின் தரத்தில் அமலாக்க துறை கவனம் செலுத்த வேண்டும். அமலாக்கத்துறை திருப்தி அடைந்தால் மட்டும் போதாது, அது நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட வேண்டும். வாய்மொழி ஆதாரங்கள் நீதிமன்றத்தில் நிலைக்காது” என்றும், அமலாக்கத்துறையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.

“இன்று வாக்குமூலம் அளித்த நபர் நாளை தனது வாக்குமூலத்தில் தொடர்ந்து உறுதியாக நிற்பாரா என்பது கடவுளுக்கு தான் தெரியும். குறுக்கு விசாரணையின் போது என்ன ஆகும் என்று தெரியாது. அறிவியல் ஆதாரங்கள் இல்லாவிட்டால் வழக்குகள் நிலைத்து நிற்காது” என்றும் தெரிவித்தனர்.

Also Read: வினேஷ் போகத் தகுதி நீங்கம் - பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? : காங்கிரஸ் கேள்வி!