India

திடீரென இடிந்து விழுந்த கோயில் சுவர்... 9 குழந்தைகள் பரிதாப பலி... பாஜக ஆளும் ம.பி-யில் கோரம்!

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் சாகர் பகுதியை அடுத்து அமைந்துள்ளது சாஹ்பூர் என்ற பகுதி. இங்கு சுமார் 50 ஆண்டுகள் பழமையான ஹர்தவுல் பாபா கோயில் ஒன்று உள்ளது. இங்கு நாள்தோறும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வந்து வழிபடுவது வழக்கம். இந்த சூழலில் இங்கு தற்போது திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் அந்த கோயிலின் சுவர் திடீரென்று விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பலரும் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்கள் கத்தி கூச்சலிடவே, அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். மேலும் ஆம்புலன்ஸ், போலீஸ் என பலருக்கும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டபோது, 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த கோயிலை சரியாக பராமரிக்காததே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தொடந்த்து பெய்து வரும் கனமழை காரணமாகவும் இந்த சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த துயர சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர், இதே ம.பி-யில் ரேவா என்ற பகுதியில் பாழடைந்த சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: எச்.ராஜா நிகழ்ச்சியில் முதலமைச்சர் குறித்து அவதூறு... பாஜக நிர்வாகி கபிலன் அதிரடி கைது !