India

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு மறுப்பு : கேரள அமைச்சர் குற்றச்சாட்டு!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 344 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் முற்றிலுமான இடிந்து தரைமட்டமானது. மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 4 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இரண்டு நாட்களாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். ஒன்றிய அரசு வயநாட்டு பகுதியை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அதேபோல், இந்த நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன்,வயநாடு நிலச்சரிவை ஏற்கனவே மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. ஆனால் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. ஒன்றிய அரசுக்கு கேரள அமைச்சரவை கடிதம் எழுதியும் தேசிய பேரிடராக அறிவிக்க அவர்கள் தயாராக இல்லை.” என குற்றம்சாட்டியுள்ளார்.

Also Read: ”ஒன்றிய அரசே ஒரு தேசிய பேரிடர்தான்" : கனிமொழி எம்.பி கடும் தாக்கு!