India

வயநாடு நிலச்சரிவு : இயற்கையின் கோரத்தாண்டவத்தில் 300-ஐ தாண்டிய உயிர்பலி... தொடரும் மீட்புப்பணி !

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி கொண்டன.

தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் பேரிடர் மீட்புக் குழு ஈடுபட்டு வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஏராளமானோரை காணவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.

தற்போதுவரை அந்த பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளை இழந்தஏராளமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 37 சென்டி மீட்டர் மழை பெய்ததால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிலரின் பேரின் உடல்கள் 38 கிலோமீட்டர் தாண்டியுள்ள நிலம்பூர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது இந்த சம்பவத்தின் கோரத்தை வெளிகாட்டுவதாக அமைந்துள்ளது. நிலச்சரிவால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை வயநாடு முன்னாள் எம்.பி ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் சந்தித்தார்.பின்னர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.