India

வயநாடு நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 282-ஆக உயர்வு : மீட்பு பணிகள் தீவிரம்!

தமிழ்நாட்டின் மேற்கு பகுதிகளிலும், கேரளாவின் பல பகுதிகளிலும், கர்நாடகத்தின் உள் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக அதிகனமழை பொழிந்து வருகிறது.

இதனால், கேரள மாநிலத்தின் வயநாடு மலைப்பகுதியில், நிலச்சரிவு ஏற்பட்டு, சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின.

இதனை அரசியல் ரீதியாக மாற்றும் முயற்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னெச்சரிக்கை விடுத்தும், கேரள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், “வயநாட்டில் 115-204 மி.மீ மழை பெய்யும் என்று ஒன்றிய அரசின் வானிலை எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அடுத்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட அன்று ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. இந்த கோர சம்பவம் நிகழ்வும் முன் வரை அப்பகுதியில் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை.

நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே, அன்று காலை 6 மணிக்கு, ரெட் அலர்ட் விடுத்தனர். ஜூலை 29 அன்று, இந்திய புவியியல் ஆய்வு மையம், ஜூலை-30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறிய நிலச்சரிவு அல்லது பாறை வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது. தே போன்று ஒன்றிய நீர் ஆணையமும் இந்தப் பகுதியில் உள்ள இரண்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் தெரிவிக்கவில்லை.

பருவநிலை மாற்றம் தொடர்பான கடுமையான சிக்கல்கள் உள்ளன என்பதை ஒன்றிய அரசும் உணர வேண்டும். கடந்த காலங்களில், இப்போது நாம் பார்ப்பது போல் அதிக மழை பெய்ததை பார்த்திருக்கிறோமா? நமக்கு காலநிலை மாற்றத்தினை தணிக்கும் முயற்சிகள் தேவை. இது போன்ற ஏதாவது இயற்கை பேரிடர் நடந்தால், நீங்கள் மற்றவர்களின் மீது பழியை சுமத்த முயற்சிக்க கூடாது. நான் சொன்னது போல், இது பழி போடும் நேரம் இல்லை” என பதிலடி கொடுத்தார்.

இதனிடையே, தமிழ்நாடு அரசின் சார்பில், ரூ. 5 கோடிக்கான காசோலையை, அமைச்சர் எ.வ. வேலு கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார்.

இரண்டு நாட்களாக மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 282-ஐ எட்டியுள்ளது.

மாயமானவர்கள் எண்ணிக்கை 700க்கும் அதிகமாக இருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை கூடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் வயநாட்டிற்கு, இன்று (1.8.24) பார்வையிட செல்கின்றனர்.

Also Read: “வந்தே பாரத் விடுவது பெருமையல்ல; விபத்தில்லாத ரயில்வே தான் பெருமை” : மோடி அரசுக்கு ‘முரசொலி’ அட்வைஸ்!