India

“சமூக நீதியை தழைக்க வழிவகை செய்த தீர்ப்பு” : 3% உள் இடஒதுக்கீடு தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு !

தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு வரும் உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தமிழ்நாட்டில் கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அருந்ததியினருக்கு 3% உள் இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. இந்த உள் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பட்டியல் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீடு வழங்க தடையில்லை என்றும், உள் ஒதுக்கீடு சட்டங்கள் செல்லும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். 7 நீதிபதிகளில், பேலா திரிவேதி என்ற ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்திருந்த நிலையில், மற்ற 6 நீதிபதிகளும் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தை இந்த தீர்ப்புக்கு தற்போது அனைவர் மத்தியிலும் வரவேற்பு பெற்று வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான வைகோ அறிக்கை வாயிலாக தனது வரவேற்பை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

"பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு; இந்த இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று (01.08.2024) அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு மூன்று விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட பல மாநிலங்களின் உள் இட ஒதுக்கீடு முடிவுகளுக்கு எதிரான 20 வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, வரலாற்றுச் சிறப்புள்ள இத்தீர்ப்பை வழங்கியது சமத்துவத்திற்கு வழி வகுக்கும். தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான 3 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு, முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பட்டியல் இனத்தவரின் 18 விழுக்காடு இடஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகத்திற்கு 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகளில் 6 பேர், பட்டியலினத்தவர் - பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மாநிலங்களுக்கு உரிமை உண்டு. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் ஒரு தரப்பு மட்டுமே பலன்களை அனுபவித்தால் அதில் மாநில அரசுகள் தலையிட முடியும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதிப்படுத்தினர்.

மேலும் இத்தகைய உள் இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் 6 நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட இந்த அரசியல் சாசன அமர்வில் நீதிபதி பேலா திரிவேதி மட்டுமே மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார். உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் இத்தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டி இருப்பதுடன், சமூக நீதி தழைக்கவும் வழிவகை செய்திருப்பது பாராட்டத்தக்கதாகும்."

Also Read: 3% உள்ஒதுக்கீடு தீர்ப்பு : “திராவிட மாடல் பயணத்தில் மற்றுமோர் அங்கீகாரம்” - முதலமைச்சர் நெகிழ்ச்சி !