India

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் புகுந்த மழைநீர் : பா.ஜ.க அரசின் கட்டுமானத்தில் ஏற்பட்ட மற்றொரு விரிசல்!

ரூ. 970 கோடி செலவில் கட்டி எழுப்பப்பட்ட, புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டு, ஒரு ஆண்டே நிறைவடைந்த நிலையில், கனமழைக்கு கூட தாக்குப்பிடிக்காத கட்டிடமாக அம்பலப்பட்டுள்ளது பேச்சு பொருளாகியுள்ளது.

இதனால், கேள்வித்தாள் கசிவு ஒருபுறம், மேற்கூரை கசிவு மறுபுறம் என பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

அண்மையில், மிக ஆடம்பரத்துடன் கட்டி திறக்கப்பட்ட ராமர் கோவில், சில மாதங்களிலேயே நீர் கசிவை எதிர்கொண்டது போல, தற்போது ஒன்றிய பா.ஜ.க.வினரால் கட்டி எழுப்பப்பட்ட மற்றொரு பிரம்மாண்ட கட்டடத்திலும் கசிவு ஏற்பட்டுள்ளதால் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது பா.ஜ.க.

இது குறித்து கேரள காங்கிரஸ் தனது X தள பக்கத்தில், “மதிப்பிற்குரிய கிரண் ரிஜிஜூ அவர்களே, இப்போதும் பழைய நாடாளுமன்றத்திற்கு திரும்ப நீங்கள் விரும்பாமல், எம்.பிக்களுக்கு குடை வழங்க விரும்பினால், நாங்கள் தயாரிக்கும் உலக தரம் வாய்ந்த குடைகளை பரிசாக தருகிறோம். அது உங்களின் புதிய நாடாளுமன்றம் போல, கசியாது” என தெரிவித்துள்ளது.

மூத்த ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய், “புதிய நாடாளுமன்றத்திலேயே நீர் தேங்கியிருக்கும்போது குடிமக்கள் என்ன செய்வார்கள்? இந்த கட்டடம் கட்டப்பட்ட வேகத்தால் இதில் அழகும் இல்லை, அம்சமும் இல்லை. அற்புதமாகவும் அழகாகவும் இருக்கும் பழைய நாடாளுமன்றக் கட்டடமும் அதன் மைய அரங்கும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. மக்களின் வரிப்பணம்தான் விரயம்!” என குற்றம் சாட்டியுள்ளார்.

Also Read: பட்டியல் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில், உள் இடஒதுக்கீடு செல்லும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!