India

வயநாடு நிலச்சரிவு: 151 ஆக அதிகரித்த உயிரிழப்பு- 211 பேர் காணாமல் போனதால் உயிர்பலி அதிகரிக்கும் என அச்சம்!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி கொண்டன.

தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் பேரிடர் மீட்புக் குழு ஈடுபட்டு வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 211 பேரைக் காணவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.

தற்போதுவரை அந்த பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளை இழந்த 3000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 37 சென்டி மீட்டர் மழை பெய்ததால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 32 பேரின் உடல்கள் 38 கிலோமீட்டர் தாண்டி நிலம்பூர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி 50 க்கு மேற்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று காலை விபத்து ஏற்பட்ட பகுதிக்கு ராணுவம் சென்று சேர்ந்ததாகவும், அங்கு உடனடியாக அவர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் போதைப் பொருள் விற்கும் அளவு பாதுகாப்பான மாநிலம்தான் குஜராத் : முரசொலி தாக்கு !