India

ஓடிக்கொண்டிருக்கும்போதே கழன்று சென்ற இன்ஜின்... தொடரும் இரயில் அசம்பாவிதங்கள்... வீடியோ வைரல்!

கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இரயில் விபத்து சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறி வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டையே உலுக்கிய ஒடிசா இரயில் கோர விபத்தில் 300 பேர் உயிரிழந்தனர், 1200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த கோர விபத்தை தொடர்ந்து அடுத்தடுத்து என தொடர்ந்து இரயில் விபத்து குறித்து தினந்தோறும் செய்திகள் வெளிவந்த வண்ணமாக இருக்கிறது.

தொடர்ந்து இப்படியே இரயில் விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் இரயில்வே நிலையம் அருகே ஹவுரா - மும்பை விரைவு இரயில் தடம்புரண்டு 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இப்படியே தொடர்ந்து இரயில் விபத்துகள் ஏற்பட்டு வரும் சூழலில் ஒன்றிய அரசு இதுகுறித்து இன்னமும் அலட்சியமாக இருந்து வருகிறது பலர் மத்தியிலும் கண்டங்களை எழுப்பி வருகிறது.

இதுபோன்ற நிகழ்வு நேற்றும் (ஜூலை 29) நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திபூர் என்ற பகுதியருகே சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் இரயில் நேற்று வந்துகொண்டிருந்தது. தர்பங்காவில் இருந்து புது டெல்லி வரை செல்லும் இந்த இரயிலில் வழக்கம்போல் பல பயணிகள் பயணித்தனர். இந்த சூழலில் இந்த இரயில் ஓடிக் கொண்டிருக்கும் போதே, திடீரென இன்ஜின் தனியாக கழன்று சென்றுள்ளது.

ஓடிக்கொண்டிருந்த இரயிலில் இருந்து பயணிகள் இருக்கும் பெட்டி தனியாகவும், இன்ஜின் தனியாகவும் கழன்றதால் பயணிகள் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த விபத்தால் இரயில் சற்று தாமதமாக புறப்பட்டது. இந்த விபத்து குறித்து ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒடிசாவை தொடர்ந்து, டெல்லி, உத்தர பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், தற்போது ஜார்க்கண்ட் என பல இரயில் விபத்து தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ஆனால் இவற்றுக்கு ஒன்றிய அரசு முறையான நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது.

Also Read: ”நமது வீரர்களின் சாதனை தொடர என்றும் கழக அரசு துணை நிற்கும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்