India

”பத்திரிகையாளர்களை முடக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : பத்திரிகையாளர் ரோஹிணி சிங் விமர்சனம்!

2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஜூலை 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக இந்த கூட்டத்தொடரில் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாகவே ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பத்திரிக்கையாளர்களின் குரல்களை ஒடிக்கி வருகிறது. நாடாளுமன்றத்திற்குள் என்ன நடக்கிறது என்ற உண்மையை மக்களுக்கு பா.ஜ.க அரசு மறைத்து வருகிறது.

இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும் போது கூட, "பத்திரிகையாளர்களை நாடாளுமன்றத்திற்குள் ஏன் அனுமதிப்பது இல்லை?" என ஒன்றிய அரசுக்கு கேள்வியை எழுப்பினார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளை முடக்கியவர்கள் பத்திரிகையாளர்களை முடக்குகிறார்கள் என பத்திரிக்கையாளர் ரோஹிணி சிங் விமர்சித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், ”நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கக் கூடாதென பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்படக் காரணம், அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசுவதும் அவர்களின் கருத்துகளை பதிப்பிப்பதும்தான்.

அந்தக் கருத்துகளுக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. எதிர்க்கட்சிகளை ஊடகங்களில் இல்லாமல் ஆக்கிய ஆளுங்கட்சிக்கு இந்த விஷயம் பதற்றம் கொடுத்ததால்தான் பத்திரிகையாளர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read: "நிலத்தை ஒரு ரூபாய்க்கு தொழிலதிபர்களுக்கு கொடுக்க முடியாது" - ஒன்றிய அரசின் நிதியை மறுத்த இமாச்சல் அரசு !