India

”காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் ஒன்றிய அரசு” : மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் குற்றச்சாட்டு!

2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை ஜூலை 23 ஆம் தேதி மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க MP தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசுகையில், ”ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய தமிழச்சி தங்கப்பாண்டியன்,"சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கு ரூ.63,000 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்த ஒன்றிய அரசு இதுவரை ஒரு பைசா கூட வழங்கவில்லை.

பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படும் போது ஏன் தமிழ்நாட்டிற்கு மட்டும் பேரிடர் நிவாரண நிதி வழங்கவில்லை?. கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்தவே ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.கவுக்கு தேர்தலில் தோல்வியை வழங்கியதால், தமிழ்நாட்டு மக்களை பழிவாங்குகிறதா ஒன்றிய அரசு?. இந்த பட்ஜெட் ALL India பட்ஜெட் அல்ல; Alliance பட்ஜெட். காழ்ப்புணர்ச்சி இல்லாமல் அனைத்து மாநிலங்களையும் சமமாக ஒன்றிய அரசு நடத்த வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

Also Read: பட்ஜெட்டில் புறக்கணிப்பு : "பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" - தயாநிதி மாறன் MP ஆவேசம் !