India

செயலிழந்த மைக்ரோசாப்ட் விண்டோஸ்... பாதிக்கப்பட்ட விமான சேவை - கையால் எழுதி கொடுக்கப்பட்ட Boarding Pass !

இன்று காலை முதல் மைக்ரோசாப்டின் விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டம் செயலிழந்தது. இதனால் உலகெங்கும் அதனை பயன்படுத்தும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மேலும், விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டத்தை பயன்படுத்தி வந்த விமான, வங்கி சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதன் பாதிப்பு கடுமையாக இருந்து வருகிறது. முக்கிய விமான நிலையங்களில் இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 40க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை விமான நிலையத்தின் இணையதள சேவை இன்று பகல் 12 மணியில் இருந்து இணையதளம் சரியாக வேலை செய்யாமல், மிகவும் தாமதமாக செயல்பட்டதால், விமான பயன்களுக்கு, கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதை அடுத்து விமான நிறுவனங்கள், கவுண்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து, போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்தனர். இதனால் ஒவ்வொரு பயணிக்கும் போர்டிங் பாஸ் கொடுப்பதற்கு தாமதம் ஆகியதால், பயணிகள் விமானங்களில் ஏறுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

இதனால் சென்னையில் இருந்து மும்பை, லக்னோ, பெங்களூர், மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, சிலிகுரி, ஹைதராபாத், கோவை, தூத்துக்குடி, திருச்சி, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா,புனே, கோவா மற்றும் சர்வதேச விமானங்களான சிங்கப்பூர் கோலாலம்பூர் இலங்கை டாக்கா உள்ளிட்ட 40 -க்கும் மேற்பட்ட விமானங்கள், சென்னையில் இருந்து சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Also Read: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் UPSC முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை - விண்ணப்பிப்பது எப்படி? - விவரம் !