India

இரு வாரங்களாக வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத அசாம் மக்கள் : நீடிக்கும் பா.ஜ.க அரசின் அலட்சியம்!

பா.ஜ.க ஆளும் அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா என்பவர், தனது சொந்த போக்குவரத்திற்காக, தனி விமானங்கள் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தி, மக்கள் பணத்தில் சுமார் ரூ. 58 கோடியை தனக்காக மட்டுமே செலவிற்று கொண்டவர் என்ற பெறுமைக்கு சொந்தக்காரர்.

இவரது ஆட்சியில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டது மட்டுமல்லாமல், இந்து - இஸ்லாமிய வேற்றுமை எண்ணங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறோம் என ஒவ்வொரு இடமும் சென்று பிரச்சாரம் செய்து வரும் ஹிமாந்த பிஸ்வாஸ் ஆட்சியில், மழை வெள்ளம் ஏற்பட்டு இரு வாரங்களை கடந்தும், பாதிப்பிலிருந்து மீளாமல் அவதிப்பட்டு வருகின்றனர் அசாம் மக்கள்.

இதற்கு மக்களிடமும், எதிர்க்கட்சிகளிடமும் கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல், “அசாம் மாநில பா.ஜ.க அரசு, அசாம் மாநிலத்திற்காக எதுவும் செய்வதில்லை. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 90% பகுதிகளுக்கு, இன்றுவரை நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. வெள்ளம் வந்து 15 -20 நாட்களாகியும், மக்களிடம் இருந்து துயரம் மட்டும் நீங்கவில்லை” என்றும்,

அசாம் காங்கிரஸ் தலைவர் பூபென் போரா, “அசாம் வெள்ளத்தில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 30 இலட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனினும், அசாம் மாநில பா.ஜ.க, முறையே செய்ய வேண்டிய எந்த நடவடிக்கைகளையும் செய்யவில்லை” என்றும் தெரிவித்துள்ளனர்.

இவர்களையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜித்தேந்திர சிங், “பா.ஜ.க அரசு, கடந்த 10 ஆண்டுகளில் வெள்ள பாதிப்புகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்ததாக தெரிவிக்கிறது. ஆனால், வெள்ளத்தால் 4 - 5 அடி நீர் தேங்கி நிற்கிறது. 30 இலட்சம் பேர் இதனால், அவதிக்குள்ளாகியுள்ளனர். இதற்கு யார் பொறுப்பேற்பது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும், இதற்கு அசாம் மாநில பா.ஜ.க தரப்பிடமிருந்து, எவ்வித தக்க பதிலும் கிடைக்கப்பெறவில்லை.

Also Read: ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் : பாஜக மூத்த நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!