India

நள்ளிரவில் வீடு புகுந்து ஐடி நிறுவனரை கடத்திய ஊழியர்கள்... 8 பேர் அதிரடி கைது... விசாரணையில் பகீர்!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல ஐடி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற அந்த நிறுவனத்தில் பலரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழலில் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ரவிச்சந்திரா ரெட்டி, கடந்த ஜூலை 10ம் தேதி வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர்கள் கடத்தியுள்ளனர்.

இதையடுத்து இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிசிடிவி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, ரவிச்சந்திரா ரெட்டி இருக்கும் இடத்தை அறிந்தனர். அதன்படி தனியார் ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவரை, போலீசார் மீட்டனர்.

இதைத்தொடர்ந்து ரவிச்சந்திரா ரெட்டி அளித்த வாக்குமூலத்தின்படி, போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதில் 5 பேர் ரவிச்சந்திராவின் நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்கள் என்று தெரியவந்தது.

பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சில பண பிரச்னை காரணமாக நிறுவன ஊழியர்களுக்கு விச்சந்திரா சம்பளம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். சுமார் 1,200 ஊழியர்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். ஊழியர்கள் சம்பளம் குறித்து பேசும்போதும், அவர் முறையாக பதிலளிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த சில ஊழியர்கள், ரவிச்சந்திராவை திட்டம் போட்டு கடத்தியது விசாரணையில் அம்பலமானது. மேலும் அவரை கடத்தும்போது, அவரது வீட்டில் இருந்து 84 லேப்டாப்கள்., 4 கார்கள், 5 செல்போன்கள், 3 பாஸ்போர்ட்கள் உள்ளிட்டவையும் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மாநிலங்களவையில் பெரும்பான்மை இழந்த பா.ஜ.க.வும், NDA-ம்! : சர்வாதிகாரத்திலிருந்து பெறப்பட்ட விடுதலை!