India

குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை இயற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் - பாஜக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை !

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை.அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியது பாஜக அரசு.இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில், இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் இயற்ற கோரி விவசாயிகள் மீண்டும் டெல்லி முற்றுகை போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ஷா நிர்வாகிகள் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் இயற்ற வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், ஜூலை 16 முதல் 18ஆம் தேதி வரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை மாநிலங்களவையைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்பிக்கள் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர். அப்போது, விவசாயிகள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் மீண்டும் எழுப்ப வலியுறுத்த இருப்பதாக தெரிவித்தனர். நாடாளுமன்றம் வரும் 22ஆம் தேதி கூட உள்ள நிலையில் விவசாயிகள் பிரச்சனைகளை முக்கிய பிரச்சினையாக நாடாளுமன்றத்தில் இந்த முறை மீண்டும் எதிர்க்கட்சியில் எழுப்ப வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகள் கோரிக்கை தீர்க்க உடனடியாக நடவடிக்கை தொடங்க விட்டால் மீண்டும் டெல்லி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Also Read: கொளுத்தப்பட்ட மனுஸ்மிருதி : பாடதிட்டத்தில் இருந்து மனுஸ்மிருதி நீக்கப்படும் என டெல்லி பல்கலை. அறிவிப்பு !