India

மீண்டும் Pegasus சர்ச்சை : மெஹபூபா முப்தியின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு!

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் 2021ஆம் ஆண்டு பெரும் புயலைக் கிளம்பியது.

அப்போது, ஆப்பிள் நிறுவனம் தனது தனது பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பியது. இந்த எச்சரிக்கை குறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இஸ்ரேல் நாட்டின் உளவு மென்பொருளான பெகாசஸ் ஸ்பைவேர் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. பெகாசஸ் மூலம் தங்கள் மொபைல்கள் உளவு பார்க்கப்பட்டதாக பல பத்திரிகையாளர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் குற்றஞ்சாட்டினர். இவ்விவகாரம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் இந்திய நாடாளுமன்றத்திலும் புயலைக் கிளப்பியது.

இந்நிலையில், பெகாசஸ் மென்பொருள் மூலம் தனது செல்போன் உளவு பார்க்கப்படுவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தியின் மகள் இல்டிஜா முஃப்தி புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், அரசை விமர்சகர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை உளவு பார்ப்பதற்காக இந்திய அரசு ஆயுதமாக பயன்படுத்தும் பெகாசஸ் மென்பொருள் மூலம் தனது போன் ஹேக் செய்யப்பட்டதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்தி அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வின் அரசியலை ஏற்க மறுக்கும் பெண்களை உளவு பார்க்கும் அளவுக்கு ஒன்றிய அரசு தரம் தாழ்ந்து போய்விட்டதா என்றும் கேள்வி எழுப்பி உள்ள இல்டிஜா முஃப்தி , இவ்விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read: Pegasus : ஒவ்வொரு முறையும் நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது - விசாரணைக் குழு அமைத்து உச்சநீதிமன்றம் அதிரடி!