India

BMW சொகுசு கார் மோதி விபத்து... 1.5 கி.மீ தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண்... மும்பையை உலுக்கிய சம்பவம்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் வோர்லி பகுதியில் கடந்த ஜூலை 7-ம் தேதி, பிரதீப் நாக்வா, அவரது மனைவி காவேரி ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால், BMW சொகுசு கார் வந்துள்ளது. அந்த கார், காவேரியின் வாகனத்தில் மோதியதில், சுமார் 1.5 கி.மீ தூரத்துக்கு காவேரி இழுத்துச் செல்லப்பட்டார்.

இந்த கோர விபத்தில் சிக்கிக்கொண்ட காவேரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்துக் கொண்டிருந்தார். பெண் ஒருவரை விபத்து ஏற்படுத்தி விட்டதை உணர்ந்த காரை ஓட்டி வந்த நபர், உடனே தனது டிரைவரை காரை ஓட்ட சொல்லிவிட்டு, அந்த நபர் பின்னால் இருக்கும் இருக்கையில் அமர்ந்துகொண்டார். அந்த சமயத்தில் அந்த ஓட்டுநர், பின்னோக்கி காரை எடுக்கும்போது, விபத்தில் கீழே விழுந்துகிடந்த காவேரி மீது அந்த கார் மேலே ஏறி, இறங்கியுள்ளது.

இதையடுத்து இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரிக்கையில், அந்த காரை ஓட்டி வந்த நபர், பாஜக கூட்டணி கட்சியான ஷிண்டேவின் சிவசேனா கட்சி பிரமுகர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா என்று தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தலைமறைவாக இருந்த மிஹிர் ஷாவை போலீசார் தேடி வந்த நிலையில், அவரும், ஓட்டுநர் ராஜரிஷியும் கைது செய்யப்பட்டனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் மிஹிர் ஷா குடித்துவிட்டு காரை ஏற்றி கொலை செய்தது அம்பலமானது. ஆனால் மிஹிர் ஷா கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் ரூ.15 ஆயிரம் பிணைத் தொகை செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தார்.

மேலும் ஓட்டுநர் ராஜரிஷியை நீதிபதியிடம் ஆஜர்படுத்தி, ஜூலை 11-ம் தேதி வரை காவலில் எடுத்துள்ளனர் போலீசார். இந்த கொடூர சம்பவம் தற்போது நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Also Read: ரௌடி சீர்காழி சத்யா விவகாரம் : பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி அலெக்ஸிஸ் சுதாகருக்கு பார் கவுன்சில் தடை !