India

NEET முறைகேட்டால் ரத்து செய்யப்பட்ட முதுநிலை தேர்வு - தேதியை அறிவித்த NBEMS !

நடப்பு ஆண்டில் நடைபெற்ற இளநிலை (UG) படிப்புகளுக்கான நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவில் ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் மோசடி நடந்துள்ளது. இவையனைத்தும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை மாணவர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர். நாள்தோறும் நடைபெறும் விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமாக இருக்கிறது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பலரும் வலியுறுத்தி வந்த போதிலும், ரத்து செய்யப்படாது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் பூதகரமாகியுள்ள நிலையில், நீட் முதுநிலை (PG) தேர்வு நடைபெறுவதற்கு வெறும் 12 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது. ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீட் முதுநிலை தேர்வு வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு வேளைகளாக நடைபெறும் என்றும் மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியம் (NBEMS) அறிவித்துள்ளது. இதனிடையே நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் வரும் ஜூலை 8-ம் தேதி நடைபெறவுள்ளது.

Also Read: ”இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி பதிலடி!