India

ஹத்ராஸ் ஆன்மிக நிகழ்ச்சி சம்பவம் : “பாஜக அரசின் அலட்சியப்போக்கே காரணம்” - செல்வப்பெருந்தகை கண்டனம்!

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் உள்ள புல்ராய் கிராமத்தில் இந்து மத சத்சங்கம் சார்பில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நேற்று (ஜூலை 2) நடைபெற்றது. போலே பாபா என்பவர் தலைமையில் மானவ் மங்கள் மிலான் சத்பவன சமாகன் குழு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்கள் ஒரே பகுதியிலிருந்து வெளியேற முயன்ற நிலையில், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் பல நூறுபேர் சிக்கிக்கொண்டனர். இந்த நெரிசலில் சிக்கி இதுவரை சுமார் 120-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த கோர சம்பவத்துக்கு வெளியேறும் இடத்தில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததே காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் இவ்வளவு உயிரிழப்புக்கு மத்தியிலும் மூத்த அதிகாரிகள் யாரும் இந்த இடத்துக்கு நீண்ட மணி நேரமாக வரவே இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் டிரக்குகள், டெம்போக்கள் கொண்டு செல்லப்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அதோடு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல எந்த வித ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும், ஹத்ராஸ் மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்களும் மருத்துவ பணியாளர்களும் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த கோர சம்பவத்துக்கு நாடு முழுவதும் இருந்து பாஜக அரசுக்கு கண்டனங்களும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

"உத்திரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் சாமியாரின் சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 116 பேர் உயிரிழந்த கொடுமை நிகழ்ந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா மடத்தில் நிகழ்வு நடைபெற்ற இடம் மிகவும் சிறியதாக இருந்ததாகவும், அதில் 1 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக இத்தகைய உயிரிழப்பு நடந்துள்ளது.

இத்தகைய சிறிய இடத்தில் லட்சக்கணக்கில் மக்கள் பங்கேற்பதற்கு காவல்துறை எப்படி அனுமதித்தது என்று தெரியவில்லை. இந்த சோகமான உயிரிழப்புக்கு உத்திரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசின் காவல்துறையின் அலட்சியப்போக்கு தான் காரணமாகும். பொது வெளி மைதானத்தில் நடத்தப்பட வேண்டிய நிகழ்வை, அரங்கத்திற்குள் நடத்த அனுமதித்ததால், அப்பாவி மக்கள் 116 பேர் பரிதாபமாக பலியாகியிருப்பது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.

இத்தகைய சொற்பொழிவு நடக்க அனுமதி அளித்த காவல்துறை மீதும் இதை நடத்தியவர்கள் மீதும் தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இத்தகைய விபத்துகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும். உத்திரப் பிரதேசத்தில் பலியான 116 பேரின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்."

Also Read: 3 புதிய குற்றவியல் சட்டம் : “ஜனநாயக உணர்வில்லாத பாஜக அரசு” - அமித்ஷாவுக்கு NR இளங்கோ எம்.பி பதிலடி !