India

”தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய அரசு” : மாநிலங்களவையில் வில்சன் MP குற்றச்சாட்டு!

18 ஆவது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதிவயேற்றனர். பின்னர் இருஅவைகள் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி வில்சன் பேசும் போது, ”90% சட்ட பிரிவுகள் முந்தைய IPC சட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. பிறகு எதற்கு கிரிமினல் சட்டங்களுக்கு சமஸ்கிருத பெயர் வைக்க வேண்டும்?.146 MPக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு விவாதம் இல்லாமல் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகம் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இன்று நீட் மோசடி குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வு,மோசடி காரணமாக பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கலைஞர் ஆட்சியின் போது நீட் தேர்வுக்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கினர்.தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசும் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.31,600 கோடி வழங்க வேண்டும். ஆனால் இதுவரை ஒன்றிய அரசு நிதியை வழங்கவில்லை. எனவே உரிய நிதியை ஒதுக்க வேண்டும். வெள்ள நிவாரண நிதி ரூ. 37 ஆயிரம் கோடி தமிழ்நாடு கோரிய நிலையில் ரூ. 267 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது ” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”எனது பேச்சை நீக்குவதால் உண்மை மாறாது” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அதிரடி!