India

உ.பி ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் : 100-க்கும் மேற்பட்டோர் பலி... அதிகரிக்கும் உயிர்பலி !

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இந்து மத சத்சங்கம் சார்பில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. போலே பாபா என்பவர் தலைமையில் மானவ் மங்கள் மிலான் சத்பவன சமாகன் குழு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்கள் ஒரே பகுதியிலிருந்து வெளியேற முயன்ற நிலையில், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் பல நூறுபேர் சிக்கிக்கொண்டனர்.

இந்த நெரிசலில் சிக்கி இதுவரை 120க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. வெளியேறும் இடத்தில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததே இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய அந்த பகுதி மக்கள், " இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும் மூத்த அதிகாரிகள் யாரும் இந்த இடத்துக்கு வரவேயில்லை. மாவட்ட நிர்வாகம் போதுமான ஏற்பாடுகள் செய்யாததே இந்த பெரும் விபத்துக்கு காரணம். அரசு நிர்வாகம் எங்கே போனது?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் டிரக்குகள், டெம்போக்கள் கொண்டுசெல்லப்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதோடு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல எந்த வித ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும், ஹத்ராஸ் மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்களும் மருத்துவ பணியாளர்களும் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Also Read: பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி கடன் : விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் !