India

குடியரசுத் தலைவர் உரை : இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டனம்!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது. இதையடுத்து 18 ஆவது மக்களவையில் புதிய எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்டதை அடுத்து இன்று நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.

அப்போது, ”மூன்றாவது முறையாக, இந்த அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதன் வழி மக்கள் இந்த அரசின் ஆட்சியை மட்டுமே விரும்புகின்றனர்” என ஒரு அரசியல் கட்சி சார்ந்து குடியரசுத் தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குடியரசுத் தலைவர் உரைக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். ”303 இடங்களிலிருந்து 240 இடங்களுக்குக் குறைந்துவிட்டோம் என்பதை பா.ஜ.கவுக்கு இன்னும் புரியவில்லை. தங்களிடம் 303 இடங்கள் உள்ளதாக நினைத்துக் கொண்டு குடியரசுத் தலைவருக்கு உரை எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள்” என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹிவா மொய்த்ரா கண்டித்துள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ” நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவரின் 51 நிமிட உரையின் போது, காணொளி வாயிலாக மோடியைக் காட்டியது 73 முறை, ராகுல் காந்தியைக் காட்டியது 6 முறை, அரசைக் காட்டியது 108 முறை, எதிர்க்கட்சியைக் காட்டியது 18 முறை. சன்சாத் ஒலிபரப்பு, நாடாளுமன்ற அவை நிகழ்வுகளைக் காண்பிப்பதற்கு தானே தவிர, ஒளிப்பதிவாளர்கள் விருப்பத்தை எல்லாம் காண்பிப்பதற்கு அல்ல" என விமர்சித்துள்ளார்.

Also Read: "மன்னராட்சியை அடையாளமான செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்க வேண்டும்" - சமாஜ்வாதி கட்சி கோரிக்கை !