India

”இந்திய மக்களின் குரலாக எதிர்க்கட்சிகள் இருக்கும்” : மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு!

மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பா.ஜ.க மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. இதையடுத்து 18 ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

புதிய அரசின் முதல் கூட்டத்தொடரின்போது தற்காலிக சபாநாயகர் பதவி எப்போதும் நாடாளுமன்றத்தின் மூத்த எம்.பி.க்கு வழங்கப்படுவது மரபு. இந்த மரபை மீறி நாடாளுமன்றத்தில் இளயவரான பாஜகவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் என்பவரை பாஜக அரசு தற்காலிக சபாநாயகராக நியமித்தது.இதற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக துணை சபாநாயகரை நியமிக்காமலே பா.ஜ.க அரசு ஏமாற்றிவிட்டது. இதனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கினால் சபாநாயகர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்தன.

அதற்கு பாஜக உடன்படாத நிலையில், சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு செய்தன.அதன்படி இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட நிலையில், பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனால் 48 ஆண்டுகளில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் குரல் வாக்கெடுப்பு மூலமாக பா.ஜ.க வேட்பாளர் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.பின்னர் சபாநாயகர் தேர்தலில் வெற்றிபெற்ற ஓம் பிர்லாவை பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக அழைத்துச்சென்று சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர்.

பின்னர் அவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ”இந்த அவை நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கிறது. சபாநாயகர்தான் அந்த குரல்களின் இறுதி நடுவர். இந்திய மக்களின் குரலாக கடந்த முறையை காட்டிலும் கூடுதல் பலத்துடன் எதிர்க்கட்சிகளின் குரல்கள் ஒலிக்கும்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: மக்களவையின் எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி - இந்தியா கூட்டணி ஆலோசனைக்கு பிறகு முடிவு !