India

அரசியலமைப்பு புத்தகத்துடன் தமிழில் பதவி பிரமாணம்... மக்களவையில் தமிழ்நாடு எம்.பி-க்கள் !

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இதனிடையே பாஜகவினர் பிரசாரத்தின்போது, அரசியலமைப்பை மாற்றுவதே நோக்கம் என்ற வகையில் பேசி வந்தனர். தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பல்வேறு உண்மைக்கு புறம்பான பிரசாரங்களிலும் மோடி உட்பட பாஜகவினர் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து அரசியலமைப்பை பாதுகாப்பது நமது கடமை என்று எதிர்க்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தி பிரசாரத்தை மேற்கொண்டனர். அதிலும் ராகுல் தனது ஒவ்வொரு பிரச்சாரத்திலும் அரசியலமைப்பு சட்டத்தின் சிறிய புத்தகத்தையும் வைத்துக்கொண்டே பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இது மக்கள் மத்தியில் சிறந்த கவனத்தை பெற்றது.

இந்த சூழலில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற பதவி பிரமாணம் நிகழ்வில் 266 எம்.பி-க்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். மீதமிருக்கும் எம்.பிக்கள் இன்று (ஜூன் 25) பதவி பிரமாணம் எடுத்துக்கொள்கின்றனர். நேற்று நடைபெற்ற நிகழ்வில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கையடக்க அரசியலமைப்பு சட்ட புத்தகத்துடன் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

அந்த வகையில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த எம்,பி-க்கள் தமிழில் உறுதிமொழியை வாசித்து, அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியவாறு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். மொத்தம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் 40 எம்.பி-க்களும் இன்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

எந்த அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற பாஜக துடிக்கிறதோ, தற்போது அதே புத்தகத்தை பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முன்பு காண்பித்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 2026-க்குள் 75 ஆயிரத்திற்கு மேற்பட்ட அரசுப் பணிகள் நிரப்பப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!