India

கேள்விக்குள்ளான NEET PG தேர்வின் வெளிப்படைத்தன்மை : ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம் !

நடப்பு ஆண்டில் நடைபெற்ற இளநிலை (UG) படிப்புகளுக்கான நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவில் ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் மோசடி நடந்துள்ளது. இவையனைத்தும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை மாணவர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர். நாள்தோறும் நடைபெறும் விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமாக இருக்கிறது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பலரும் வலியுறுத்தி வந்த போதிலும், ரத்து செய்யப்படாது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் பூதகரமாகியுள்ள நிலையில், நீட் முதுநிலை (PG) தேர்வு நடைபெறுவதற்கு வெறும் 12 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. இந்த சூழலில் நீட் முதுநிலை தேர்வின் வெளிப்படைத் தன்மை குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடப்பட்டுள்ளது.

நீட் முதுநிலை (PG) தேர்வு வெளிப்படைத் தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து மருத்துவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மற்ற தேர்வுகளில் உள்ளது போல், நீட் PG தேர்விலும் விடைகளை (Answer Keys) வெளியிட வேண்டும், OMR விடைத்தாள் நகல்களை வழங்க வேண்டும், மறுமதிப்பீட்டுக்கு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளது.

இந்த சூழலில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேசிய தேர்வு வாரியம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணை ஜூலை 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நீட் முறைகேடுக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றம் ஜூலை 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: NEET PG தேர்வு ரத்து : “ஒன்றிய அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது” - மருத்துவர்கள் சங்கம் கண்டனம் !