India

நீட் வினாதாள் வெளியான விவகாரம் : மேலும் 7 பேர் கைது... 20 ஆக உயர்ந்த கைது எண்ணிக்கை !

நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஏராளமான முறைகேடுகள் அம்பலமாகின.

இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது. தொடர்ந்து இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அங்கு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே நீட் தேர்வுக்கு முதல் நாள் இரவு, நீட் வினாத்தாள் கிடைத்ததாக இதன் மூலம் ஏராளமானோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து 4 மாணவர்கள் உள்ளிய 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நீட் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தங்குவதற்கு பீகார் மாநில அமைச்சர் உதவியதாகவும் பீகாரில் கைதான மாணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் நீட் மோசடி தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் மேலும் 7 பேரை பீகார் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர்கள் பாட்னா அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்பட உள்ளனர். இவர்களையும் சேர்த்து பீகார் போலீஸ் கைது செய்தவங்களுடைய எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

Also Read: மம்தா பானர்ஜீயுடன் பேசிவரும் 3 பாஜக MP-க்கள் ? கட்சி மாற திட்டமா ? - மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு !