India

நீட் தேர்வு முறைகேடு : உறுதியான நிலையிலும் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசு !

நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரம் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரேமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது.

இதையடுத்து இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் ஜூன் 23-ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் ரூ.32 லட்சம் லஞ்சம் பெற்று வினாத்தாளை கசியவிட்டதாக சிக்கந்தர் என்ற இடைத்தரகர் ஒருவர் வாக்குமூலம் அளித்ததோடு, ரூ.1.8 கோடிக்கான காசோலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பீகாரை சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. நீட் முறைகேடு ஒருபுறம் இருக்க, UGC, NET, பீகார் மாநில தேர்வு, UPSC உள்ளிட்ட அரசு தேர்வுகளிலும் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. UGC, NET தேர்வுகளின் வினாத்தாள்கள் டெலிகிராமில் கசிந்தது.

இதையடுத்து அந்த தேர்வுகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும் அரசுத் தேர்வுகளில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகள் அம்பலமாகி வரும் நிலையில், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "NET தேர்வு வினாத்தாள் கசிந்தது தேசிய தேர்வு முகமையில் தவறு. UGC, NET தேர்வுக்கான வினாத்தாள் டெலிகிராம் சமூக ஊடகத்தில் கசிந்துள்ளது. தேசிய சைபர் கிரைமிடம் இருந்து தகவல் கிடைத்தவுடன் உடனடி நடவடிக்கையாக தேர்வர்களின் நலன் கருதி தேர்வு ரத்து செய்யப்பட்டது.

நீட் தேர்வு ரத்து செய்யப்படாது. இதுகுறித்து விசாரணை குழு அமைக்கப்படும். தேசிய தேர்வு முகமை நடைமுறைகளை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. உயர்மட்டக்குழு அளி்க்கும் பரிந்துரைக்கு பிறகு தேர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படும். வரும் காலங்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறாமல் தேசிய தேர்வு முகமையின் தரத்தினை மேம்படுத்தி தேர்வு நடத்திட உறுதி செய்யப்படும்." என்றார்.

ஏற்கனவே நீட் முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய அரசு அலட்சியமாக இருந்து வரும் நிலையில், தற்போது ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது உறுதியான நிலையிலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 12ம் வகுப்பு முடித்தவர் ஒன்றிய அமைச்சரா? - ஒன்றிய அரசின் திட்டத்தை தவறாக எழுதிய சர்ச்சை : யார் இவர்?