India

தொடரும் இரயில்வே துறையின் அலட்சியம்... வந்தே பாரத் இரயிலின் உணவில் கரப்பான்பூச்சி : பயணிகள் அதிர்ச்சி!

இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்த இரயில் சேவை வந்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. குறிப்பாக இந்த இரயில் இயக்கப்படும் தண்டவாளத்தில் மாடுகள் வந்து, முட்டி சேதமடைவது, மழை சமயத்தில் தண்ணீர் மேலே இருந்து வடிவது, இரயிலின் கதவு சரிவர திறக்காமல் இருப்பது என பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தது.

மேலும் நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு இரயிலில் பரிமாறப்படும் உணவுகளில் பூச்சிகள், கெட்டுப்போன உணவு என்று அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வருகிறது. இந்த புகார்கள் குறித்து இரயில்வே துறைக்கு புகார் அளித்தாலும், நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறதே தவிர, நடவடிக்கை எடுத்து போல் தெரியவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் ராணி கம்லாபதியில் இருந்து ஜபல்பூருக்கு சென்ற வந்தே பாரத் விரைவு இரயிலில் பயணித்த பயணியின் உணவில் கரப்பாண்பூச்சி இருந்துள்ளது. இதுகுறித்து இரயில்வே துறைக்கு சமூக வலைதள பக்கத்தில் புகார் அளித்தார். அப்போது நடவடிக்கை எடுப்பதாக கூறியது. இருப்பினும் தற்போது மேலும் அதே போல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 18-ம் தேதி மத்திய பிரதேசத்தின் போபாலில் இருந்து ஆக்ராவுக்கு சென்ற வந்தே பாரத் விரைவு இரயிலில் பல்வேறு பயணிகள் பயணம் செய்துள்ளனர். அப்போது பயணம் செய்த தம்பதியினர், இரயிலில் உணவுக்கும் சேர்த்து முன்பதிவு செய்துள்ளனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் இறந்த நிலையில், கரப்பான்பூச்சி ஒன்று மிதந்துள்ளது.

இதையடுத்து இதுகுறித்து அந்த தம்பதி தனது உறவினருக்கு தெரிவிக்கவே, அவர் இதனை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து IRCTC மற்றும் இரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினிக்கும் டேக் செய்துள்ளார். மேலும் இதுபோல் அஜாக்கிரதையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இணையவாசியின் பதிவுக்கு இன்று (ஜூன் 20) பதிலளித்த, இந்திய இரயில்வே துறை, மன்னிப்பு கேட்டதோடு, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. மேலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக இந்திய இரயில்வே துறைக்கும், அந்த துறை ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ”கல்வித்துறையை அழித்து வரும் BJP,RSS” : ராகுல் காந்தி எம்.பி குற்றச்சாட்டு!