India

23 வயது இளைஞருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: உ.பி முதல்வரின் தொகுதியில் ஷாக் -போலீஸ் அலட்சியத்தால் சோகம்!

பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் தொடர்பான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் இந்த சம்பவம் அதிகளவு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் 23 வயது இளைஞர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதி கோரக்பூர். இங்கு 23 வயது இளைஞர் ஒருவர் தனது சகோதரருடன் வாடகை வீட்டில் தங்கியிருந்து போட்டித்தேர்வுக்கு பயின்று வந்துள்ளார். இந்த சூழலில் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கரண் என்ற இளைஞர் அறிமுகமாகியிருக்கிறார். இருவரும் நண்பர்களாக நீண்ட நாட்கள் பழகிய நிலையில், இந்த இளைஞரை கரண் சந்திக்க அழைத்துள்ளார்.

அதன்படி கரணை சந்திக்க இந்த இளைஞர் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 13) அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து இருவரும் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கே கரணின் மற்ற 3 நண்பர்களும் வந்துள்ளனர். அப்போது அவர்கள் அனைவரும் இந்த இளைஞரிடம் அத்துமீறியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர் அங்கிருந்து செல்ல முயற்சித்தார்.

ஆனால் அவரை தடுத்து நிறுத்திய அந்த நான்கு பேரும், தங்கள் பெல்ட்டால் அவரை தாக்கியதோடு, கூட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் இதனை தங்கள் மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். வேறு வழியின்றி, தனது மொபைல் போன் மூலம் UPI செய்து பணத்தை கொடுத்துள்ளார்.

மேலும் அவரிடம் இருந்த முக்கிய உபகரணங்களை பறித்துவிட்டு, இதனை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டுவிடுவதாக மிரட்டி அவரை வெளியிட்டுள்ளனர் அந்த கும்பல். இதையடுத்து இதுகுறித்து மறுநாள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ள பாதிக்கப்பட்ட இளைஞரை, அங்கிருந்த போலீசார் அலைக்கழித்துள்ளனர்.

ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து புகார் கொடுக்க முயன்றும், அந்த இளைஞரை கேலி கிண்டல் செய்த போலீசாரும், இதனை பெரிதாக்க வேண்டாம் என்று அறிவுரை கூறி, வழக்கை எடுக்க மருத்துள்ளனர். இதையடுத்து மேலதிகாரிகளின் உதவியை நாடிய பிறகே, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

எனினும் அதற்கு பிறகு போலீசார் அந்த இளைஞரை மிகவும் கேவலமாக நடத்தி, கிண்டல் அடித்துள்ளனர். மேலும் விசாரணை என்ற பெயரில் அவமானதிபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த இளைஞர், சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் பூதாகரமான நிலையில், தற்கொலைக்கு சில மணி நேரங்களுக்கு பிறகு குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரண் (26), தேவேஷ் சர்மா (24), அங்கத் குமார் (21) மற்றும் மோகன் பிரஜாபதி (20) ஆகிய 4 பேரின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அதில் 3 பேரை கைது செய்துள்ளனர்; தலைமறைவாக இருக்கும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பவன் உயிரிழந்த 6 மணி நேரத்திற்குள், 3 குற்றவாளிகளை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில், தற்கொலைக்கு காரணமான காவல்துறைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இளைஞரை மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் துன்புறுத்தியதற்காகவும், தற்கொலைக்குத் தூண்டியதற்காகவும் காவல்துறை மீது உ.பி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: சரத் பவார் அணியில் சேர 19 MLA-க்கள் விருப்பம் - மூத்த தலைவரின் கருத்தால் மராட்டிய அரசியலில் பரபரப்பு !