India

நீட் முறைகேடு : "ஒரு தவறு ஒட்டு மொத்த சிஸ்டத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்" - உச்சநீதிமன்றம் கருத்து !

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கூட பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரேமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் சில மாணவர்கள் குற்றம்சாட்டி பதிவு வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து நீட் முறைகேடு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வெளிவந்தது.

அதைத் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என ஏராளமான மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் நீட் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், "தவறு நடந்திருந்தால் அதனை ஒத்துக் ஒத்துக்கொள்ள வேண்டும். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தவறு இழைப்பது சமூகத்துக்கு ஆபத்து" என தேசிய தேர்வு முகமைக்கு கண்டனம்.தெரிவித்தனர்.

தொடர்ந்து, "0.1% தவறு நடந்திருந்தாலும் அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும். ஒரு நபர் தவறு செய்தாலும் அது ஒட்டு மொத்த சிஸ்டத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்"என்று கூறிய நீதிபதிகள், "தேசிய தேர்வு முகமையிடமிறுந்து உரிய நேரத்தில் உரிய நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்" என்று கூறி வழக்கு விசாரணை 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: விதிகளுக்கு புறம்பான ஆம்னிப் பேருந்துகள் இயங்குவதற்கு இனி அனுமதியில்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !