India

நீட் முறைகேடு : பணம் பெற்று வினாத்தாளை கசியவிட்ட அரசு அலுவலர்கள்... கைது செய்யப்பட்டவர் ஷாக் வாக்குமூலம்!

நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த முறைகேடு சம்பவங்கள் நடந்துள்ளது.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரேமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது. இதையடுத்து இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் ஜூன் 23-ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பீகாரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேலும் 9 மாணவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். எனினும் இந்த நீட் முறைகேடு குறித்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ.32 லட்சம் பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக இடைதரர்கள் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பீகார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது மோசடி நடைபெற்றதாக கூறப்படும் தேர்வு மையத்தில் போலீசார் மேற்கொண்ட ஆய்வில், எரிந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் சிக்கியது.

அதனடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிக்கந்தர் என்ற இடைத்தரகர் ஒருவர், நீட் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு பாட்டனாவில் அரசு அலுவலர்களான நிதிஷ் மற்றும் அமித் ஆகிய 2 பேரை சந்தித்து பேசியதாகவும், அவர்கள் நீட் தேர்வு வினாத்தாளை கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், அதற்காக ரூ.32 லட்சம் பணம் வரை பெற்றுக்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

மேலும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர்களுடன் தாம் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இந்த விசாரணையை மேலும் துரிதப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து நீட் தேர்வை முழுவதுமே ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

Also Read: தேர்வுகளில் குளறுபடி அல்ல! : குளறுபடிகளில் தான் தேர்வு!