India

மே.வங்கத்தில் பயணிகள் ரயில் மீது மோதிய சரக்கு ரயில்: தூக்கி வீசப்பட்ட பெட்டிகள் -விபத்து நடந்தது எப்படி?

திரிபுரா மாநிலத்தின் அகர்தலா என்ற பகுதியில் இருந்து மேற்கு வங்கத்தின் செலடா நோக்கி கஞ்சன்ஜங்கா விரைவு இரயில் வழக்கம்போல் சென்றுகொண்டிருந்தது. இந்த சூழலில் இந்த இரயில் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. அப்போது காலை சுமார் 9 மணியளவில், நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா பயணிகள் இரயில் மீது, வேகமாக வந்த சரக்கு இரயில் ஒன்று மோதியது.

இதில் விபத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம்புரண்டு உருக்குலைந்தன. மேலும் பயணிகள் இரயிலில் இருந்த பல்வேறு பயணிகள் படுகாயமடைந்தனர். தொடர்ந்து இதுகுறித்து மீட்புக்குழுக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் விரைந்து வந்த அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கொடூர விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்துள்ள 30-க்கும் மேற்பட்டோரை மீட்டு அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்ததோடு, மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து மாநில மீட்புப்படை, இரயில்வே மீட்புப்படையினருடன் இராணுவமும் தற்போது மீட்புப்பணியில் இணைந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் மீட்கும் பணிகள் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், சரக்கு இரயில் இயக்கிய இரயில் ஓட்டுநர், சிக்னலை கவனிக்காததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே நின்றுகொண்டிருந்த பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதியுள்ளது.

இந்த மோதலில், சரக்கு இரயிலின் கனமான இன்ஜின் பகுதி, பயணிகள் இரயிலின் பின்பகுதியில் சட்டென்று இடித்தால், பயணிகள் இரயிலின் முதல் பெட்டி தூக்கி வீசப்பட்டது. இதில் சரக்கு இரயிலும் தடம் புரண்டதால், மேலும் இரண்டு பெட்டிகளும் கடும் சேதமானது. எனினும் இந்த இரயில் விபத்துக்கு உண்மையான காரணம் தெரியவரவில்லை. மீட்புப்பணிகள் முடிந்த பிறகே, இதுகுறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை வெளியாகும்.

ஒன்றிய அரசின் கீழ் இருக்கும் இரயில்வே துறையில் இது போன்ற விபத்து நிகழ்வு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதற்காக இரயில்வே துறை நடவடிக்கை எடுக்கிறதா என்பது குறித்து பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் தொடக்கத்தில் ஒடிசாவில் சரக்கு இரயில் உள்பட 3 இரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட கொடூர விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: திராவிட மாடல் நாயகர் ஆட்சியில் ஆவின் பால் உற்பத்தியில் புதிய சாதனை - தமிழ்நாடு அரசு பாராட்டு !