India

மேற்கு வங்கத்தில் நேருக்கு நேர் மோதிய இரயில்கள்... உருகுலைந்துபோன பெட்டிகள்... உயரும் பலி எண்ணிக்கை !

திரிபுரா மாநிலத்தின் அகர்தலா என்ற பகுதியில் இருந்து மேற்கு வங்கத்தின் செலடா நோக்கி கஞ்சன்ஜங்கா விரைவு இரயில் வழக்கம்போல் சென்றுகொண்டிருந்தது. இந்த சூழலில் இந்த இரயில் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. அப்போது காலை சுமார் 9 மணியளவில், நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா பயணிகள் இரயில் மீது, வேகமாக வந்த சரக்கு இரயில் ஒன்று மோதியது.

இதில் விபத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம்புரண்டு உருக்குலைந்தன. மேலும் பயணிகள் இரயிலில் இருந்த பல்வேறு பயணிகள் படுகாயமடைந்தனர். தொடர்ந்து இதுகுறித்து மீட்புக்குழுக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் விரைந்து வந்த அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கொடூர விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்ததோடு, மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 5-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நீட் முறைகேடு : பணம் பெற்று வினாத்தாளை கசியவிட்ட அரசு அலுவலர்கள்... கைது செய்யப்பட்டவர் ஷாக் வாக்குமூலம்!