India

தேர்வுகளில் குளறுபடி அல்ல! : குளறுபடிகளில் தான் தேர்வு!

உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார் என பா.ஜ.க மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி வகிக்கும் மாநிலங்களில், நீட் தேர்வு முறைகேடுகள் அரங்கேறுவதை விட, மற்ற நிலை தேர்வுகளில் இடம்பெறும் முறைகேடுகளே அதிகம் எனும் அளவிற்கு அட்டூழியங்கள் தலைவிரித்தாடுகின்றன.

அவ்வகையில், சில மாதங்களுக்கு முன் பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசத்தில் ஆய்வு அலுவலர்கள் மற்றும் துணை ஆய்வு அலுவலர்கள் பணியில் 411 பணியிடங்களும், துணை நிலை காவலர் பணியில் சுமார் 65 ஆயிரம் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருந்த காரணத்தால், அப்பணி நிரப்புதலுக்கான தேர்வினை, சுமார் 58 இலட்சம் பேர் எழுதியிருந்தனர்.

இதனால், வேலை கண்டிப்பாக கிடைத்துவிடும், வறுமை நீங்கிவிடும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த தேர்வர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக்குவது போல், “கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட காரணங்களால், 58 இலட்சம் பேர் எழுதிய தேர்வுகளை ரத்து செய்து, சில மாதங்களுக்கு பின் மீண்டும் தேர்வு நடத்தப்படும்” என அறிவித்து அதிருப்தியை ஏற்படுத்தியது உத்தரப் பிரதேச அரசு.

இதனைத் தொடர்ந்து குஜராத் மற்றும் பீகாரில் பள்ளிக்கல்வியிலும், மற்ற நிலை கல்வியிலும், தேர்வு விதிமீறல்கள் அதிகப்படியாக அரங்கேறின.

இந்நிலையில், இது போன்ற முறைகேடுகள் பா.ஜ.க ஆட்சி வகிக்கும் மாநிலங்களில் மட்டும் தானா என்றால், அதுவும் இல்லை, தேசிய அளவிலும் தான் என்றபடி,

ஒன்றிய அரசு தரவுகளின் படி, 78 துறைகளில் சுமார் 9 இலட்சத்து 64 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளன.

அதாவது ஒன்றிய அரசின் மொத்த பணியிடங்களில் சுமார் 30 விழுக்காடு பணியிடங்கள் நிரப்பப்படாமல் தான் உள்ளது.

இதற்கான தேர்வுகள் நடத்தப்படும் போதும், தேர்வு முடிவுகளுக்கு முன் முறைகேடுகளே முக்கிய செய்தியாக வெளிவருகிறது.

அவ்வரிசையில் தற்போது இணைந்த தேர்வு முறைகேடு தான், நீட் தேர்வு முறைகேடு.

இதில், தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் தரப்பட்டது மட்டும் சிக்கல் இல்லை. கேள்வித்தாள் கசிவும், அதற்கு இலட்சக்கணக்கில் பணப்பகிர்வு இடம்பெற்றதும் அடங்கும்.

இதுவும், குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பீகார் போன்ற பா.ஜ.க மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலேயே அதிகம் காணப்படுகின்றன.

இவ்வாறு, சரியான நிர்வாகத்தன்மையற்று, செயலாற்றி வரும் பா.ஜ.க, பல இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதற்கு, தேசிய அளவில் கண்டனங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

Also Read: “அன்புநெறியை பின்பற்றும் இசுலாமியப் பெருமக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !