India

உதவி கேட்டு வந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் : POCSO வழக்கில் எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!

தென்மாநிலங்களில் பாஜக வலுவாக இருக்கும் ஒரே மாநிலமாக கர்நாடகா இருந்து வருகிறது. இங்கு பாஜகவை வளர்த்ததில் எடியூரப்பாவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அங்கு பாஜக சார்பில் 4 முறை முதலமைச்சராக எடியூரப்பா இருந்துள்ளார். இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடியூரப்பாவை பாஜக மேலிடம் ஒதுக்கி தள்ளியது.

இதனால் தனி கட்சி ஆரம்பித்த அவர் பின்னர், தனது கட்சியை பாஜகவில் இணைத்தார். இதன் காரணமாக பாஜகவில் அவருக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தற்போது எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கர்நாடகா மாநில பாஜக தலைவராக உள்ளார். எடியூரப்பாவின் மகன்களில் ஒருவரான பி.ஒய். விஜயேந்திரா தற்போது மீண்டும் எம்.பியாக உள்ளார்.

இந்த சூழலில், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த பிப்ரவரி 2ம் தேதி சிறுமியின் பெற்றோர் ஒரு உதவியை கேட்டு பெங்களூரின் சதாசிவநகரில் உள்ள எடியூரப்பாவின் இல்லத்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது சிறுமியை தனி அறைக்குள் அழைத்துச்சென்ற எடியூரப்பா, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் இதுகுறித்து புகார் தெரிவிக்க தயங்கிய பாதிக்கப்பட்ட குடும்பம், பின்னர் கடந்த மார்ச் மாதம் சதாசிவ நகர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தார். இதையடுத்து எடியூரப்பா மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த வழக்கு CID-க்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த சூழலில் எடியூரப்பா கடந்த ஏப்ரல் 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜரான நிலையில், மீண்டும் ஜூன் 12-ம் தேதி (நேற்று) மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். ஆனால், தான் டெல்லியில் இருப்பதாகவும், ஜூன் 17-ம் தேதி ஆஜராக முடியும் என்றும் எடியூரப்பா தனது வழக்கறிஞர் மூலம் பதிலளித்தார்.

இந்த நிலையில், எடியூரப்பா மீது தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், புகார் கொடுத்து 4 மாதங்கள் ஆகும் நிலையில், குற்றவாளியை கைது செய்யவில்லை என்றும், புகார் கொடுத்த தனது தாயும் உயிரிழந்துவிட்டதாகவும், தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்திருந்தார்.

மேலும் குற்றவாளியான எடியூரப்பாவை கைது செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் பாஜக மூத்த தலைவரான எடியூரப்பாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாதபடி, பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது பெங்களூரு போக்ஸோ நீதிமன்றம். மேலும் தேவைப்பட்டால் அவரை கைது செய்ய நேரிடும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Also Read: குவைத் தீ விபத்து... அதிகரிக்கும் தமிழர்கள் உயிரிழப்பு எண்ணிக்கை - துரித நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு !