India

நாடாளுமன்றத்தில் புகைகுண்டு வீச்சு வழக்கு : குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது மர்மநபர்கள் அத்துமீறி உள்ளே புகுந்து புகை குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் பா.ஜ.க எம்.பியின் அனுமதி கடித்தின் பேரிலேயே இவர்கள் பார்வையாளர்களாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், பா.ஜ.க அரசின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என குற்றம்சாட்டினர்.

இதையடுத்து இந்த தாக்குதல் வழக்கில் மானோ ரஞ்சன் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த வாரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதில், மனோரஞ்சனிடமிருந்து 2018 ஆம் ஆண்டு கொசாவோ நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புகை உண்டு வீச்சு தாக்குதல் தொடர்பான வீடியோ கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனோரஞ்சனிடமிருந்து கைப்பற்றப்பட்ட டயரி ஒன்றும் முக்கிய ஆவணமாக குற்றப்பத்திரிகை சேர்க்கப்பட்டுள்ளது.

அதில், 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்ட போது சீனாவை சேர்ந்த லீ-ரோங் என்பவர் உடன் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று இமிகிரேஷன் துறை ஊழியர் ஒருவரிடம் நட்பு வைத்துள்ள மனோரஞ்சன் நாடாளுமன்ற பாதுகாப்பு கருவிகள் குறித்து அவரிடம் விசாரித்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

Also Read: மோடியின் அமைச்சரவையில் இத்தனை வாரிசுகளா... "இதுதான் பாஜக சொல்லும் வாரிசு அரசியலா ? - ராகுல் காந்தி !