India

ஜம்மு காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாத தாக்குதல் : 10 பேர் உயிரிழப்பு, ஏராளமானோர் படுகாயம் !

நேற்று பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்ற நிலையில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது .

இந்த கோவிலுக்கு பேருந்தில் சென்ற பக்தர்கள் குழு ஒன்று தங்கள் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது நேற்று மாலை 6.15 மணிக்கு போனி பகுதியில் உள்ள டெரியாத் என்ற கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழக்க, பேருந்து அங்கிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பேருந்தில் இருந்த 33 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், "பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் வருத்தமளிக்கிறது. இந்த ஜம்மு காஷ்மீரில் கவலைக்கிடமான பாதுகாப்புச் சூழலை இது விளக்குகிறது.

உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது"என்று கூறியுள்ளார்.