India

நீட் தேர்வு குளறுபடி - மாணவர்களின் குரலை பா.ஜ.க அரசு புறக்கணிப்பது ஏன்? : பிரியங்கா காந்தி கேள்வி!

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டு வருகின்றனர்.

இருந்தும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து கலைப்படாத ஒன்றிய அரசு தொடர்ந்து நீட் தேர்வை நடத்தி வருகிறது. அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கூட பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தற்போது கருணை மதிப்பெண் மூலம் சுமார் 44 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் குரலை பா.ஜ.க அரசு புறக்கணிப்பது ஏன்? என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், " முதலில் நீட் தேர்வுத்தாள் கசிந்தது. தற்போது தேர்வு முடிவுகளிலும் மோசடி நடந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒரே மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்திருப்பது குளறுபடிகள் நடந்திருப்பதை உறுதி செய்கிறது.

மேலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட செய்திகள் மிகவும் வருத்தமளிக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை அரசு புறக்கணிப்பது ஏன்? நீட் தேர்வு முடிவுகள் மோசடி தொடர்பான நியாயமான கேள்விகளுக்கு மாணவர்களுக்கு பதில் தேவை.புகார்களை விசாரித்து தீர்வு காண வேண்டியது அரசின் பொறுப்பு அல்லவா? " என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: இரவல் தயவில் பிரதமர்! : மோடியின் வண்டவாளத்தை சுட்டிக்காட்டிய முரசொலி!