India

”ஒரு தெய்வப்பிறவிக்கு இந்தியாவில் குடியுரிமை உண்டா?” : மோடியை கிண்டல் செய்த சசி தரூர்!

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 5 ஆம் கட்ட தேர்தல் மே 20 ஆம் தேதி நடந்து முடிந்தது. நாளை பீகார், ஹரியானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் 6 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த மக்களவை தேர்தலில் தங்களின் 10 ஆண்டு கால சாதனையை எதுவும் சொல்வதற்கு இல்லாததால் பிரதமர் மோடி ’நான் மனிதப்பிறவி அல்ல’ என்று கம்பிக்கட்டும் கதை விட்டு வருகிறார்.

ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பிரதமர் மோடி, ”நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகத்திற்கு அனுப்பியது கடவுள்தான். உயிரிழல் ரீதியாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பிவைத்துள்ளார்” என கூறினார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தருர், ஒரு தெய்வப்பிறவிக்கு இந்தியாவில் குடியுரிமை உண்டா? என பிரதமர் மோடியின் பேச்சுக்கு கிண்டல் அடித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "ஒரு தெய்வப்பிறவிக்கு இந்தியாவில் குடியுரிமை உண்டா? இல்லையெனில் அவரால் தேர்தலில் வாக்களிக்கவோ போட்டி போடவோ முடியுமா? தன்னைத் தானே தெய்வமென அறிவித்துக் கொண்டவர் தேர்தலில் பங்கேற்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆராயுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது : பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு !