India

”இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்”: அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டம்!

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 5 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நேற்று உத்தர பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் 5 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு பேசி இருக்கும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், " ஜூன் 4 ஆம் தேதி நெருங்கி விட்டது. பா.ஜ.க தோற்கடிக்கப்படுவது உறுதி. இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு பெருகியுள்ளதால் வாக்காளர்களை பாகிஸ்தானி என்று பா.ஜ.க முத்திரை குத்துகிறது. நேற்று டெல்லியில் அமித்ஷா கலந்து கொண்ட பிரச்சாரத்தில் 500 பேர் கூட பங்கேற்கவில்லை.

இதனால் ஆம் ஆத்மி ஆதரவாளர்களை பாகிஸ்தானியர்கள் என்று வேண்டும் என்றே குற்றம்சாட்டுகிறார். டெல்லி மக்கள்தான் ஆம் ஆத்மி அரசாங்கத்தை ஆட்சியில் அமரவைத்துள்ளனர். பஞ்சாபிலும் மக்கள்தான் ஆம் ஆத்மி அரசாங்கத்தை அமைத்துள்ளனர். குஜராத், கோவா, உத்தர பிரதேசம், அசாம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு பெருகியுள்ளது. இவர்கள் அனைவரையும் அமித்ஷா பாகிஸ்தானியர்கள் என்று கூறுவாரா?

நீங்கள் இன்னும் பிரதமராக வில்லை. அதற்குள் மக்களை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளீர்கள். ஜூன் 4 ஆம் தேதி பா.ஜ.க ஆட்சி அமைக்காது. நீங்களும் பிரதமராக முடியாது.

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் டெல்லி வந்து ஆம் ஆத்மியை விமர்சிக்கிறார். என்ன விமர்சிப்பதால் உங்களுக்கு என்ன லாபம்?. உங்களை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க மோடியும், அமித்ஷாவும் திட்டமிட்டுள்ளனர். முதலில் இவர்களுக்கு எதராக போராடுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Also Read: பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய சட்ட நடவடிக்கை! : நாட்டம் காட்டாத ஒன்றிய பா.ஜ.க அரசு!